bgcolor="#FFFFFF" ondragstart="return false" onselectstart="return false" expr:class='"loading" + data:blog.mobileClass'>

Friday, November 4, 2011

கொடுமையின் உச்சம்....!!


கேரள மாநிலம், எர்ணாகுளம் பள்ளி மாணவி விபசாரத்தில் தள்ளப்பட்டு பலரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக காண்ட்ராக்டர் மணிகண்டன் உட்பட 50க்கும் மேற்பட்ட கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்களில் 13 பேரை மாணவி நீதிபதியிடம் நேரடியாக அடையாளம் காட்டியுள்ளார். இந்த நிலையில் ஆலுவா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டபோது மீண்டும் மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.



வாக்குமூலத்தில் அவர்,      ‘’20 மாதங்களாக நான் தொடர்ந்து பலாத்காரம் செய்யப் பட்டேன். அதிருப்பள்ளி என்ற இடத்தில் ஒரு வீட்டில் ஒருவருக்காக என்னை புரோக்கர் உடன் தந்தை அழைத்து சென்றார். அங்கு சென்றடைந்தபோது அவருக்கு அடியாட்களாக மேலும் 4 வாலிபர்கள் அங்கு நின்றுகொண்டிருந்தனர்.

என்னுடன் வந்தது யார் என்று அவர்கள் கேட்டனர், அப்போது எனது தந்தை என்று நான் கூறினேன். அவர்கள் என்னிடம் என்ன நடந்தது என்று கேட்டனர். நான் எல்லா விபரங்களையும் தெரிவித்தேன்.

அவர்கள் எனது தந்தையிடம் நான் யார் என்று கேட்டனர். அப்போது எனது தந்தை தனக்கு தெரிந்த பெண் என்று மட்டும் கூறினார்.


எல்லா இடங்களிலும் தந்தை இப்படித்தான் கூறுவது வழக்கம். ஆனால் அங்கிருந்த நபர் என்னை நம்பினார்.

எனது செல்போனில் இருந்த குடும்ப போட்டோவையும் நான் அங்கிருந்த நபரிடம் காண்பித்தேன். பின்னர் அங்கிருந்தவர்கள் எனது தந்தையை தாக்கினர். புரோக்கரையும் விரட்டியடித்தனர். பின்னர் எங்களை அங்கிருந்து திருப்பி அனுப்பினர்.


பணம் சம்பாதிப்பதற்காக எனது தந்தை என்னை அவரது பைக்கில் அமர்த்தி கோழிக்கோடு வரை அழைத்து சென்று பலருக்கும் விருந்து படைக்க செய்தார். ஒருமுறை பெங்களூரில் தந்தையின் அருகே தூங்கிக்கொண்டிருந்தபோது மற்றொரு நபர் என்னை பலாத்காரம் செய்தார்.


எனது தந்தை அதனை காணாதது போன்று தூங்கிக்கொண்டிருந்தார். நான் பலமுறை அவரை தட்டி எழுப்பியபோதும் அவர் எழுந்திருக்கவில்லை.


ஒரு கட்டத்தில் உறவினரான இளைஞர் ஒருவரிடம் எல்லா விஷயங்களையும், எனக்கு நடந்து வரும் கொடுமைகளையும் தெரிவித்தேன். அவர் வீட்டில் உள்ள உறவினர்களிடம் நீ தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


அதன் அடிப்படையில் நானும் செயல்பட்டேன். அதன் பின்னர் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்’’என்று தெரிவித்துள்ளார்.

நன்றி : விழியே பேசு.

Post Comment

Post Comment

Saturday, October 8, 2011

வீரன் திப்புசுல்தான்...!!!


கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்" திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. "இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?" என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.



1782 டிசம்பரில் ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால் அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.

மூன்றாவது மைசூர்ப்போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1792) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.

எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. "30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது" என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.

பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.

மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அதுவரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.

"ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்" என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், 'பிளாசி'ப் போரில் பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, "இப்போது நாம் 'தைரியமாக' திப்புவின் மீது படையெடுக்கலாம்" என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.

இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.

திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை அவர்கள் கண்டதில்லை.

ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.

துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். "திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்" என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.

பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், "அந்தப் படை தன் தலைமையில் தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது" என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்ற பின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, "குடிமகன் திப்பு' என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.
பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு 'மைசூர் அரசின் சார்பாக' உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு "உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்" என்று செய்தியும் அனுப்புகிறார்.

ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், "பென்சன் ராஜாக்கள்" என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கண்ணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.

தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.

காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால் அரசுக்கான வருவாயை விவசாயம் தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.

"எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்" என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

"ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்" என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும் முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால்பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப் படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.

"அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்'' என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர். சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.

திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக் கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.

பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.

இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.

அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.

அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, "மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மை யானதா?" என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் 'சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை' உருவாக்கியது.

அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.

"எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி" என்று எழுதிய திப்பு தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். "எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது" என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.

கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின் தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.

திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. "விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்" என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

"தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க் களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்" என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.

"ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்பு தான்" என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்: "சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப் படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது."

1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன: "இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள். தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்." இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்.

மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.

தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.

"நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்."

http://tmkpfi.blogspot.com/2011/06/blog-post_2341.html

Post Comment

Post Comment

Thursday, September 29, 2011

வெண்டைகாயின் மருத்துவம்...!!!

நன்றி : TAMILMEDI.COM
வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். ஆப்பிரிக்கர்கள் `கம்போ’ என்று ஒருவகை சூப் தயாரித்தனர்.

இந்த சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும், நீளமாகவும், நுனி கூர்மையாகவும் இருப்பதால், ஆங்கிலத்தில் இதை `லேடீஸ் பிங்கர்’ என்று அழைக்கின்றனர். பழங்காலத்தில் உள்ள மக்களுக்கு இதை எப்படி சமைப்பது என்று தெரிய வில்லை. அதனால் அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியில் இருந்து பறிக்காமல் இருந்து விட்டனர்.

முற்றிய வெண்டைக்காயை பறித்த சிலர், அதன் ருசி பிடிக்காமல் வெறுத்தனர். பிற்காலத்தில் தான் இதை எப்போது பறிக்கப்பட வேண்டும்? எப்படி சுவைக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து சாலட்டாக சாப்பிடுகிறார்கள். வங்காளத்தில் முற்றிய வெண்டையை உரித்து கொட்டையை சாப்பிடுகிறார்கள். அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள்.

அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். வெண்டைக்காய் இளம்பச்சை, கரும்பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை ஆகிய வடிவங்களும் உண்டு. வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றன. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. இளசாக இருக்கும்போதே வெண்டைக்காயை பறித்து விட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும். அதனால், வாங்கிய உடனே சமைத்து விட வேண்டும்.

வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். அதனால், காம்புக்கு அருகில் ஓட்டை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். வெண்டைக்காயை பிரிஜில் வைக்கும்போது ஈரம் இல்லாமல், கழுவாமல் பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி வைக்கும் டிரேயில் வைக்க வேண்டும். ஈரம் இருந்தால் அழுகி விடும். சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி விட வேண்டும்.

சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழுகொழு போன்ற திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது.

Post Comment

Post Comment

Wednesday, September 28, 2011

சிரிப்பு...!!!


சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே


சொந்தமான கையிருப்பு – வேறு


ஜீவராசிகள் செய்ய முடியாத


செயலாகும் இந்தச் சிரிப்பு


இது அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு


இது அடங்கி நடப்பவரின் அசட்டுச் சிரிப்பு
இது சங்கீதச் சிரிப்பு
எனச் சிரிப்பைக் கலைவாணர் வகைப்படுத்தினார்.
புத்தரின் நேரடிச் சீடர் சாரிபுத்தா சிரிப்பை வகைப்படுத்தியுள்ளார் என்பது தெரியுமா?
சிரிப்பை அவர் 6 வகையாகச் சொல்கிறார்.
முதல் வகை- ஸிதா
முகபாவத்தின் அதிநுட்பங்களுடன் கட்டுப்பாடாய் வெளிப்படும் புன்னகை. இது நாமாக செய்யக்கூடியது அல்ல. புத்தரைப் போன்ற அதிநுட்ப உணர்வும் கவனமும் உடையவர்களுக்கே இது வாய்க்கும்.
இரண்டாவது வகை – ஹஸிதா
இது மெலிதான உதட்டசைவுடன், பற்களின் முனைப்பகுதிகள் வெளிப்படுமாறு அமைவது.
மூன்றாவது வகை – விஹஸிதா
சிறிதளவு சிரிப்புடன் கூடிய விரிந்த புன்னகை
நான்காவது வகை – உபஹஸிதா
உரத்த ஒலியளவுடன் கூடிய அழுத்தமான சிரிப்பு. தலை மற்றும் கையசைவுடன் இணைந்தது.
ஐந்தாவது வகை – அபஹஸிதா
கண்ணீரை வரவழைக்கக்கூடிய சிரிப்பு
ஆறாவது வகை – அதிஹஸிதா
ஒட்டுமொத்த உடம்பும் குலுங்கச்சிரிக்கிற மூர்க்கத்தனமான பெரும் கூச்சலுடன் கூடிய சிரிப்பு!
சிரிப்பு மாதிரி சின்ன விஷயங்கள்கூட கவனம் செலுத்தி நோக்கும்போது மிகப்பெரிய விஷயமாகிவிடுகிறது. அதுவே ஒட்டுமொத்த உலகமாகிவிடுவதும் உண்டு. தியானத்துடன் செய்யும்போது அது இறைவனாகவே மாறிவிடுகிறது.

நன்றி : வல்லமை.
 

Post Comment

Post Comment

அதிரடி சோதனை....!!!


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், உயர்கல்வி, "மாஜி' அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு சொந்தமான, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, சென்னையில் உள்ள வீடு, அலுவலகங்கள் என, 20 இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஏராளமான ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த தி.மு.க., ஆட்சிக்காலத்தில், உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி(எ) தெய்வசிகாமணி. இவர், அமைச்சராக இருந்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், போதுமான ஆதாரங்கள் கிடைத்ததால், பொன்முடி மீது, 2008, ஏப்ரல் 13ம் தேதி முதல், கடந்தாண்டு மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து, கூடுதல் ஆதாரங்களுக்காக, சென்னை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். சோதனையின் போது, முக்கிய ஆவணங்கள் பல சிக்கியுள்ளன. சென்னையில் மட்டும், 11 இடங்களில் சோதனை நடந்தது.இது தவிர விழுப்புரத்தில், ஏழு இடங்கள், கடலூர், புதுச்சேரி என, 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை, சைதாப்பேட்டையில், பொன்முடியின் மனைவிக்கு சொந்தமான வீட்டில், காலை 7 மணிக்கு, டி.எஸ்.பி., பொன்னுச்சாமி தலைமையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

வீட்டில், பொன்முடியின் மகன்கள் கவுதம், அசோக் மற்றும் இருவரது மனைவியர் இருந்தனர். பிற்பகல் 3 மணி வரை நீடித்த சோதனையில், வங்கி பாஸ்புக், ஏராளமான ஆவணங்கள், இப்பகுதியில் கட்டப்பட்டு வரும் மூன்று மாடி கட்டடங்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதே போல், கே.கே.நகர், எழும்பூர், ராஜா அண்ணாமலை புரத்தில் சோதனை நடத்தப்பட்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.மேலும், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது. சென்னை சைதாப்பேட்டையில் ரெய்டு நடந்த போது, தி.மு.க.,வினர் வீட்டின் முன் கூடியிருந்தனர். விழுப்புரத்தில், பொன்முடியின் நிரந்தர வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்ட போது, ஆதிசங்கர் எம்.பி., தலைமையில், 50க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் கூடியிருந்தனர். இதனால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

"சட்ட ரீதியாக சந்திப்போம்' : : பொன்முடி மீதான நடவடிக்கைகள் குறித்து, விழுப்புரத்தில் ஆதிசங்கர் எம்.பி., கூறும்போது, "பொன்முடி உரிய ஆவணங்களை வைத்துள்ளார். எந்த வழக்கையும் பொன்முடியும், கட்சியினரும் சட்ட ரீதியாக சந்திக்க தயார். ஜெ., தலைமையிலான அ.தி.மு.க., அரசின் அடக்குமுறைக்கு இது உதாரணம்' என்றார்.

பொன்முடியின் சொத்து கணக்கு : முன்னாள் அமைச்சர் பொன்முடி, 2006, சட்டசபை தேர்தலில் மனு தாக்கல் செய்தபோது, தனக்கு, 22 லட்சத்து, 43 ஆயிரத்து, 611 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்தும், 18 லட்சத்து, 68 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்தும், தன் மனைவி விசாலாட்சிக்கு, 96 லட்சத்து, 17 ஆயிரத்து, 247 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்தும், 1 கோடியே, 60 லட்சத்து, 17 ஆயிரம் ரூபாய் அசையா சொத்து உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் மனு தாக்கலின் போது, பொன்முடியின் பெயரில், 48 லட்சத்து, 79 ஆயிரத்து, 704 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்தும், 59 லட்சத்து, 14 ஆயிரத்து, 250 அசையா சொத்தும், அவரது மனைவி பெயரில், 3 கோடியே, 78 லட்சத்து, 11 ஆயிரத்து, 815 ரூபாய் அசையும் சொத்துக்களும், 3 கோடியே, 36 லட்சத்து, 26 ஆயிரத்து, 940 ரூபாய் மதிப்பில் அசையா சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சோதனை நடந்த இடங்கள்:

விழுப்புரம்:
1. சண்முகாபுரம் காலனி, பொன்முடி வீடு
2. நடேசன் நகர். பொன்முடி சகோதரர் நடனசிகாமணி வீடு
3. ஜவகர்லால் நேரு சாலை, பொன்முடி சகோதரர் தியாகராஜன் வீடு
4. ஜவகர்லால் நேரு சாலை, பொன்முடி சகோதரர் தியாகராஜன் மரகதம் மருத்துவமனை
5. பழைய கோர்ட் சாலை, பொன்முடியின் நண்பர் மணிவண்ணன் வீடு
6. காப்பியம்புலியூர், "சிகா டிரஸ்ட்' அலுவலகம்.
7. வழுதரெட்டி, கணேஷ் நகர், பொன்முடி நண்பர் திரிசங்கு வீடு

சென்னை:
8. சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனி, பொன்முடி மனைவி விசாலாட்சி வீடு.
9. கே.கே.நகர், பொன்முடி சம்பந்தி டாக்டர்.பாலசுப்ரமணியம் வீடு
10. கே.கே.நகர், பாலசுப்ரமணியத்தின் கே.எம்., நர்சிங் ஹோம்
11. கே.கே.நகர், கே.எம்., மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
12. எழும்பூர், எத்திராஜ் சாலை, பொன்முடி நண்பர் நஜிமுதீனின் வீடு
13. ஆர்.ஏ., புரம், ரமணீயம் டவர்ஸ், பொன்முடி மனைவி விசாலாட்சியின் எவர் ஸ்டைல் என்டர்பிரைசஸ்.
14. ஆர்.ஏ., புரம், ரமணீயம் டவர்ஸ். பொன்முடி மனைவி விசாலாட்சியின் விஷால் எக்ஸ்போ அலுவலகம்
15. ஆர்.ஏ., புரம், ரமணீயம் டவர்ஸ், பொன்முடி மகன் கவுதமின் காயல் பொன்னி அண்டு கோ நிறுவன அலுவலகம்.
16. ஆர்.ஏ., புரம், ரமணீயம் டவர்ஸ், சூர்யா கல்வி அறக்கட்டளை அலுவலகம்
17. வேப்பேரி, பர்னாஸ் இன்டர்நேஷனல் அலுவலகம்
18. தி.நகர், பொன்முடியின் சம்பந்தி டாக்டர். பாலசுப்ரமணியத்தின் வீடு

கடலூர்:19. திருப்பாப்புலியூர், சிதம்பரம் ரோடு, பொன்முடி மனைவியின் விஷால் ஆட்டோ மொபைல்ஸ்

புதுச்சேரி:
20. குயவர்பாளையம், பொன்முடி சகோதரர் ராஜாசிகாமணியின் விசாலாட்சி பல் மருத்துவமனை.

Post Comment

Post Comment

Wednesday, June 1, 2011

கேன்சர் நோய்

ஜெனிவா : செல்போன் பயன்படுத்ததாதவர்கள் யாராவது இருக்கிறார்‌ளா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்ல அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் செல்போன் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது. இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப் படுத்துவதால் உடலில் புற்றுநோழ் புரையோடி ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. 
இருப்பினும் செல்போன் பயன்பாடடால் கேன்சர் நோய் ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்ற வாதமும் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் செல்போன்கள் பயன்பாட்டால் கேன்சர் ( புற்றுநோய்) நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார மையம் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் ஒரு அங்கமான சர்வதேச கேன்சர் நோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. செல்போன் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இடம் பெற்றிருந்தனர். குழுவுக்கு தலைவராக அமெரிக்க அ‌திபர் ஒபாமாவின் தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஜொனாதான் சாமெட் இருந்தார். 

பூச்சிக்‌கொல்லி மருந்துக்கு நிகர் : செல்போன்கள் கேன்சர் நோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் எனவே அதனை அபாயகரமான பூச்சிக்கொல்லி, சலவை காரங்கள் ஆகிய ரசாயனப் பொருட்களுக்கு நிகராக பட்டியலிட வேண்டும் என்றும் அந்த ஆராய்ச்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.

கதிர்வீச்சு அபாயம் : செல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் கேன்சர் நோயை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. வெளிநாட்டில் மொபைல் போன் வாங்குபவர்கள், அந்த போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்ற‌ை அறிந்து கொண்டு பின்னர் தான் செல்போனை வாங்குகின்றனர். ஆனால் இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்று பரவலாக கூறப்படுகிறது. இத்தகைய விழிப்புணர்வோடு செல்போன்களை வாங்கினால், கேன்சர் அபாயத்தில் இருந்து ஓரளவுக்கு நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

நன்றி : தினமலர் 

Post Comment

Post Comment

Saturday, May 28, 2011

ரஜினி சிங்கப்பூரில்


சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் ரஜினிக்கு சிகிச்சை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 27.05.2011 அன்று இரவு மருத்துவ சிச்சைக்காக சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரஜினிக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


முதல் கட்டமாக மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் சுவாசக்கோளாறுக்கு சிகிச்சை தரப்படுவதாகவும், பிரபல சுவாசக்கோளாறு சிகிச்சை மருத்துவர் கியான் சங் ஒங் சிகிச்சை அளித்து வருவதாகவும், ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை தரப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசியாவிலேயே மிகவும் சிறந்த மருத்துவமனை என கருதப்படும் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் அமர்சிங் இம்மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி : நக்கீரன் 

Post Comment

Post Comment

Thursday, May 26, 2011

பொன்சேகா சாட்சியம்

கொழும்பு, மே.26: வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்துவிடுமாறு கோத்தபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தததை தான் கேள்விப்பட்டிருந்ததாக சரத் பொன்சேகா கூறினார்.


இலங்கைத் தமிழ் இணையதளங்கள் இதைத் தெரிவித்துள்ளன.

கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையில் சாட்சியமளிக்கும்போது அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்து விடுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்ததாக யுத்தத்தின் இறுதிக் கட்டம் வரை ராணுவத்தினருடன் தங்கியிருந்த ஊடகவியலாளர்கள் இருவர் மூலமாக நான் கேள்விப்பட்டிருந்தேன்.

அதனையே நான் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸிடமும் தனிப்பட்ட முறையில் உரையாடும் போது தெரிவித்திருந்தேன். ஆனால் அவர் ஒருபோதும் என்னைப் பேட்டி கண்டதில்லை. சண்டே லீடர் சார்பில் வேறொரு ஊடகவியலாளரே என்னைப் பேட்டி கண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் பிரட்ரிக்காவும் அங்கு இருந்தார். நோ்காணலின் போது அவர் எந்தவொரு கேள்வியையும் கேட்கவில்லை. அதன் பின் என்னுடன் தனிப்பட்ட  ரீதியில் பேசும்போது நான் மேற்கண்ட விஷயத்தை அவரிடம் தெரிவித்திருந்தேன்.

ஆனால் அதற்கு மேல் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது.  மேலும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் யாரும் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்ததாக நான் அறியவுமில்லை. ராணுவத் தளபதி என்ற வகையில் அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள எனக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை என்று சரத் பொன்சேகா தனது சாட்சியத்தின்போது கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் தெரிவிக்கின்றன.


நன்றி : தினமணி 

Post Comment

Post Comment

வீரபாண்டி ஆறுமுகம் புலம்பல்

சேலம் : ""சட்டசபை தேர்தல் தோல்வி நமக்கு புதியதல்ல; சங்ககிரியில் என்னுடைய தோல்வியை கட்சியினரே மிகவும் எதிர்பார்த்தனர்,'' என தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டத்தில், வீரபாண்டி ஆறுமுகம் நிர்வாகிகளிடத்தில் கூறினார். சட்டசபை தேர்தலில், சேலம் மாவட்டத்தில் தி.மு.க., கூட்டணி போட்டியிட்ட, 11 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. சங்ககிரி தொகுதியில் வீரபாண்டி ஆறுமுகம் வெற்றி பெறுவார் என நம்பிக்கையுடன் இருந்த தொண்டர்களும் ஏமாற்றமடைந்தனர்.
தேர்தல் முடிவுக்கு பின், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்ற பொது உறுப்பினர் கூட்டம், சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கலைஞர் மாளிகையில் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகம் பேசியதாவது: ஜூன் 3ம் தேதி, தி.மு.க., தலைவர் கருணாநிதி பிறந்த நாளை, சிறப்பாக கொண்டாட வேண்டும். தேர்தலின் போது அகற்றப்பட்ட கட்சி கொடிக் கம்பங்களை, அந்தந்த இடங்களில் புதியதாக நிறுவி வர்ணம் பூசி, கொடியேற்ற வேண்டும். பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகம் வழங்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றார்.
தேர்தல் தோல்வி நமக்கு புதியதல்ல; மக்களுக்காக எவ்வளவோ நல்ல பல திட்டங்களை கொண்டு வந்தோம். சேலம் மாவட்டத்தில் மட்டும் தி.மு.க., தோல்வியை தழுவவில்லை. தமிழகம் முழுவதும் தோல்வி நிலைக்கு தள்ளப்பட்டது. சங்ககிரியில் என்னுடைய தோல்வியை, நமது கட்சியினர் பலர் எதிர்பார்த்தனர். இனி தோல்வியை மறந்து, தலைவர் பிறந்த நாள் விழாவை அனைவரும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். இவ்வாறு வீரபாண்டி ஆறுமுகம் பேசினார்.


நன்றி : தினமலர் 

Post Comment

Post Comment

Wednesday, May 25, 2011

கடாபி

டிரிபோலி : லிபிய பிரச்னையில் சுமுகமான முடிவை ஏற்படுத்த, தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, அடுத்த வாரம் லிபியாவுக்குச் செல்ல இருக்கிறார்.லிபிய பிரச்னையில், அதன் தலைவர் கடாபியை பத்திரமாக வெளியேற்றி, நிலையான அரசியல் சூழலை ஏற்படுத்துவதற்காக, தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, அடுத்த வாரம் லிபியாவுக்குச் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த திட்டம் இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பதாக, "டாக் ரேடியா 702' செய்தி வெளியிட்டுள்ளது.கடந்த ஏப்ரலில் நடந்த ஆப்ரிக்க யூனியன் கூட்டத்தில், லிபிய விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், சில மணி நேரங்களிலேயே தோல்வியில் முடிவடைந்தன. இதையடுத்து, இப்போது தென் ஆப்ரிக்க அதிபர் அடுத்த முயற்சியில் இறங்கியுள்ளார்.இந்நிலையில், நேற்றும் டிரிபோலியில் கடாபியின் குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பல இடங்களில், "நேட்டோ' விமானப் படைகள் குண்டுகளை வீசி கடுமையாகத் தாக்கின.இதில், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாக லிபிய அரசு கூறியதை, "நேட்டோ' மறுத்துள்ளது.

நன்றி : தினமலர் 

Post Comment

Post Comment